Tuesday, September 29, 2009

ஏதோ மோகம் - பாகம் 4

“சின்ன வயசுலே அவங்க அப்பா தவறிட்டாங்க சார். இவளும்,இவ அக்காவுமா ரெண்டு பொண்ணு. அவங்கம்மா தான் வேலைபார்த்து ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. அவங்க அக்கா பத்து ஃபெயிலாகிடுச்சு. உடனே சொந்தத்திலே கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. இவ நல்லா படிப்பா. பிளஸ் டூலயும் நல்லா மார்க் எடுத்தா. குடும்ப சூழ்நிலை காரணமா மேல் கொண்டு படிக்க முடியலை. கம்யூட்டர் கோர்ஸ் முடிச்சுட்டு வேலைக்கு வந்திட்டா. அப்படியே கரெஸ்ல படிக்கிறா. எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு வரணும்கிறதுக்காக கடுமையா போராடிட்ட்டிருக்கா சார்...” என்று ஒரே மூச்சில் சேகர் சொல்லி முடித்தான்.


தூரத்தில் அலுவலக நண்பர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தேன். இப்போது அவள் முகத்தில் எனக்கு ஏதோ ஒரு சோகம் தெரிந்தது.


மதிய உணவு வேளை முடிந்து பயிற்சிகள் பரபரப்பாக தொடர்ந்தன. ராதா அவ்வப்போது என்னைப் உற்றுப்பார்ப்பதும், நான் பார்த்தால் லேசாக முறுவலித்து விட்டு பயிற்சியை கவனிப்பதுவுமாக இருந்தாள். நான் அவள் பார்வையில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன்.


மீண்டும் தேனீர் இடைவேளை.எல்லோரும் வெளியே சென்றனர். நானும் ஒரு மாற்றத்திற்காக வெளியே சென்றேன். ஆங்காங்கே தனித்தனி குழுவாக நின்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்.

நான்கு பிஸ்கட்களை கையில் எடுத்துக்கொண்டு நான் தனியாக தள்ளி சென்று வெளியே சாலையை வேடிக்கை பார்த்தவாறு நின்றேன். அப்போது வேகமாக என் அருகில் வந்து நின்ற ராதா “என்ன டிரெய்னிங் எப்படி இருக்கு ? ” என்று கேட்டாள். ”நல்லாத்தான் போகுது” என்றேன்.

“நீங்கள்லாம் ஃபேக்டரி ஆளுங்க. அதனால சப்ஜெக்டோட கோர்ஸ் நடத்துறது நல்லா புரியும். நான் அக்கவுண்ட்ஸ் சைடுன்னால ஒண்ணும் புரியலை. எங்க மேனேஜ்மெண்ட்ல டாக்குமெண்டேசன் பண்ண ஆள் வேணும்கிறதுக்காக என்னையும் சேர்த்து அனுப்பிச்சிட்டாங்க.” என்றவளிடம் “ஐ.எஸ்.ஓ ன்னாலே டாக்குமெண்டேசன்தானே முக்கியம். அதான் உங்களை மாதிரி திறமையான ஆளுங்களையும் கூட அனுப்பிச்சிருக்காங்க” என்றேன்.

சிரித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே ? ” என்று கேட்டாள்..

( தொடரும் )


Monday, September 28, 2009

ஹாப்பி பூஜா ஹாலிடேஸ்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.




பள்ளியில் படிக்கும் போது சரியாக காலாண்டு விடுமுறையில் தான் இந்த பூஜைகள் எல்லாம் வரும். சிறுபிள்ளையாக இருந்த போது வசித்த ஊரில் நிறைய பேர் வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். தினமும் புதிது புதிதாக படிகளையும், பொம்மைகளையும் மாற்றி அமைப்பார்கள். நாங்களும் தெரிந்த வீடுகளில் மலைகள், காடுகள், தெப்பகுளம் அமைக்க உதவுவோம். எங்களிடமிருக்கும் பொம்மைகளையும் கொண்டு வைப்போம். தினமும் மாலைநேரங்களில் எல்லோர் வீட்டு கொலுக்களையும் பார்த்தவாறு அப்படியே ஒரு ரவுண்டு வந்தால் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். விதவிதமான பலகாரங்களும் கிடைக்கும்.


பின் காலசூழ்நிலையில் வீடு மாறி, ஊர் மாறி...... ம்ம்ம் எல்லாம் விட்டுப் போச்சு. நாங்களும் சொந்த ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டோம். எங்கள் ஊரில் கொலு வைக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் ஊர் அம்மன் கோவிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், விசேச பூஜைகளும் நடக்கும்.ஒரு நாள் எங்கள் வீட்டு கட்டளையும் உண்டு. சென்ற வருடம் சரஸ்வதி பூஜை காலத்தில் ஊரில் இருந்தேன். தினமும் மாலையில் அம்மன் கோவிலில் பலவயது பெண்களும் பாட்டுகள் பாடியவாறு கும்மி,கோலாட்டம் என அழகாக, வித்தியாசமான அனுபவமாய் இருந்தது.




ஹாப்பி பூஜா ஹாலிடேஸ் நண்பர்களே....

Sunday, September 27, 2009

இன்று உலக இதய தினம்



ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பின் சார்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்பது இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.


அதிக உயிரிழப்புகள்: ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகிலேயே அதிக உயிரிழப்புக்கு காரணமான நோயாக இதய நோய்களே கருதப்படுகின்றன. இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய நோய்களால் மரணமடைகின்றனர்.


பொருளாதார இழப்பு: இந்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து இதய ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக நடுத்தர வயதில் மரணமடைபவர்களால் அந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இழப்பு. இந்தியாவில் மட்டும் இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு தடைவிதிப்பது, உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக பொருளாதார மன்றம், பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.


நோய்களை தவிர்க்க...: முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். கொழுப்பு இல்லாத மீன், பருப்பு வகைகள், பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

கட்டுப்பாடான எளிய வழிகளை கடைப்பிடித்து காப்போம் இதயத்தை.....


அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!


அக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரின் முதன்மை நிர்வாகியும், சிவாஜிக்கு நெருங்கிய உறவினருமான வேணுகோபால், சிவாஜி பற்றிய பல சுவாரசியமான விஷ்யங்களை பத்திரிக்கையில் கூறியதை நண்பர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


சிவாஜியின் ஒரே சகோதரியான பத்மாவதியை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே, எனக்கு சிவாஜியை நன்றாக தெரியும். உறவு முறை தான்.என்னை, "மாப்ளே' என்று சிவாஜி அழைப்பதால், அவரது சகோதரர்கள், உறவினர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் என்னை, "மாப்பிளே' என்றே அழைப்பர்.எனக்கு திருமணமாகும் போது, நான், இந்திய ராணுவத்தில், இ.எம்.இ., (எலக்ட்ரிகல் அண்டு மெக்கானிகல் இன்ஜினியரிங்) பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான், ராணுவத்தில் பணிபுரிவது, சிவாஜிக்கு ரொம்ப பெருமையான விஷயம்; நண்பர்கள், உறவினர்களிடம், நான் ராணுவத்தில் பணிபுரிவதைப் பற்றி பெருமையாக சொல்வார்.

சிவாஜிக்கு என் மேல், அளவு கடந்த பாசமும், முழு நம்பிக்கையும் எப்போதும் உண்டு. அவரது இரு மகன்கள், அவரது மூத்த சகோதரர் தங்கவேலுவின் மகன், தம்பி சண்முகத்தின் இரு மகன்கள், என் மகன்கள் இருவர், ஒரே மகள், ஆக, எட்டு குழந்தைகளும் என்னிடமே வளர்ந்தன.நான் மிலிடரிக்காரன் என்பதால், அந்த ஒழுக்கத்தோடு குழந்தைகள் வளர வேண்டும் என்பதற்காக, சகோதரர்கள் மூவரும், தங்கள் குழந்தைகளை என்னிடமே வளர்க்க விட்டனர். பிரபு, ராம்குமார் உட்பட ஐவரும், என்னை அன்போடு, "மாமா' என்று அழைப்பர்; அதே பழக்கத்தில், என் மகன்கள், என்னை, "அப்பா' என்று அழைக்காமல், "மாமா' என்றே அழைப்பர். வீட்டில் உள்ள ஏழு பையன்களும், பெங்களூரில், பிஷப் கார்டன் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், என் மகள், பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியிலும் படித்தனர்.

பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில், பிரேசர் டவுன் என்ற இடத்தில், தனி வீட்டில் நாங்கள் இருந்தோம். ஏதாவது காரணத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தாகி விட்டால், உடனே பிளைட் பிடித்து, சென்னையிலிருந்து, பெங்களூரு வந்து விடுவார் சிவாஜி. பசங்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து, இரவு, கடைசி விமானத்தில் சென்று விடுவார்.

சில சமயம், சிவாஜிக்கு, ஐந்து, ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல, ஊட்டி, கொடைக்கானலில் அவுட்-டோர் ஷ?75;்டிங் இருக்கும். அப்போதெல்லாம், எல்லாரும், காரில் அங்கு செல்வோம். அந்த விடுமுறைகளை, மிகவும் மகிழ்ச்சிகரமாக ஆக்கி விடுவார் சிவாஜி.ஆங்கில வழி பள்ளியில் படித்ததால், பிரபு, ராம்குமார் உட்பட அனைவருக்கும், ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. 1967ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நான் சென்னைக்கு வந்து விட்டேன். பிரபு, லயோலாவிலும், ராம்குமார் விவேகானந்தா கல்லூரியிலும் படித்தனர். தன் விருப்பத்தின் பேரில், என் மகள் கண்ணம்மாவை, ராம்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார் சிவாஜி. அந்த திருமணத்திற்கு, தமிழ்த் திரைப்பட உலகமே திரண்டு வந்து தம்பதிகளை வாழ்த்தியது.

சென்னையில் அப்போதிருந்த ஒரே, "ஏசி' தியேட்டர் என்ற வகையில், ராஜ்கபூர், வைஜெயந்தி மாலா, ராஜேந்திர குமார் நடித்து, இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து, இயக்கிய, "சங்கம்' என்ற சூப்பர்ஹிட் இந்தி படத்தை, சாந்தியில் ரிலீஸ் செய்தார். இரண்டு இடைவேளைகளுடன், நான்கு மணி நேரம் ஓடிய படம். எனவே, அந்த நேரத்தில் வெளியான, சிவாஜியின், "புதிய பறவை' படத்தை, பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்தனர். இதற்காகவே, பாரகன் தியேட்டர், சிவாஜி செலவில் புதுப்பிக்கப்பட்டது.தன் மனைவி கமலா பேரிலும், தன் மகள் சாந்தியின் பேரிலும், தஞ்சாவூரில் இரண்டு தியேட்டர்களை கட்டினார் சிவாஜி. ஒரே கட்டடத்தில் கீழே சாந்தி - அதில் ஆயிரம் இருக்கைகள். முதல் தளத்தில் கமலா தியேட்டர் - ஐநூறு இருக்கைகள்.அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., இரு தியேட்டர்களையும் திறந்து வைத்து, சிவாஜி பற்றி பெருமையாக பேசினார். சாந்தி தியேட்டரில், முதல் படமாக, சிவாஜி - அம்பிகா நடித்த, "வாழ்க்கை' படமும், கமலாவில், பிரபு நடித்த, "சூரக்கோட்டை சிங்கக்குட்டி' படமும் திரையிடப்பட்டன.


சிவாஜியின் 175வது படம், ஏ.வி.எம்., தயாரித்த உயர்ந்த மனிதன். அதன் வெற்றி விழாவில் அண்ணாதுரை பேசும் போது, "மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர் என்று கூறுகின்றனர்... அவரைக் காட்டிலும், சிறப்பாக நடிக்கும் ஆற்றலைப் பெற்ற சிவாஜி மட்டும், இங்கு பிறக்காமல், அமெரிக்காவில் பிறந்திருந்தால், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலகின் சிறந்த நடிகராக இருந்திருப்பார். தமிழகத்தில் அவர் பிறந்ததற்கு, நாம் பெருமைப்பட வேண்டும்!' என்று பேசினார்.சிவாஜியின் 200வது படம் திரிசூலம். இப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சாந்தி தியேட்டரில் 175 நாட்கள் ஓடின. 67 நாட்கள் வரை, அட்வான்ஸ் புக்கிங்கிலேயே டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. மொத்தம் ஒடிய 525 காட்சிகளில், 399 காட்சிகள் ஹவுஸ் புல்லாக ஓடியது, மிகப்பெரிய சாதனை.

ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி பங்கேற்ற காட்சி, "மன்னன்' படத்திற்காக, சாந்தி தியேட்டரில் ஒரு நாள் படமாக்கப்பட்டது. சாந்தி தியேட்டர் நிர்வாகியாக, நானே அந்தக் காட்சியில் நடித்தேன். சிறந்த நகைச்சுவை காட்சி என்பதால், பல, "டிவி' சேனல்களில் இந்த காட்சி, நிறைய தடவை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.சென்னை தி.நகரில், செவாலியே சிவாஜி கணேசன் தெருவில் உள்ள அவரது அன்னை இல்லம் வீட்டில், மாடியில், ஹோம் தியேட்டர் வைத்திருந்தார். 16 எம்.எம்.புரொஜக்டரும் அங்கு உண்டு. 12 இருக்கைகள் கொண்டது அந்த ஹோம் தியேட்டர். அவர் பார்க்க விரும்பும் ஆங்கில படங்களின் 16 எம்.எம்., பிரதிகளை, வாடகைக்கு பெற்று, அவர் பார்க்க ஏற்பாடு செய்வது என் பொறுப்பு; சில சமயம், அவருடன் நானும் படங்கள் பார்ப்பதுண்டு.பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கும், சிவாஜிக்கும் இடையே, நெருங்கிய பாசம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், ரக்ஷா பந்தன் அன்று, சிவாஜிக்கு ராக்கி அனுப்புவார் லதா. ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும், சகோதரனின் சீராக, லதாவுக்கு, அவருக்குப் பிடித்த பட்டுப்புடவையை பரிசாக அனுப்புவார் சிவாஜி.

கூட்டுக் குடும்பம் எங்குமே அரிதாகிவிட்ட காலத்தில், சிவாஜியும், அவரது சகோதரர்களும், கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து காட்டி சரித்திரம் படைத்தனர். இன்றும், சிவாஜி மறைவுக்குப் பின்னரும், அதே முறை தொடர்கிறது.தன்னை பராசக்தியில் அறிமுகப்படுத்தி, திரைப்பட உலகில் தனக்கு முகவரி கொடுத்த, பி.ஏ.பெருமாளை, என்றுமே மறந்ததில்லை சிவாஜி. பொங்கல் அன்று, விடியற்காலை, வேலூரில் வசித்து வந்த பெருமாளை, நேரில் சந்தித்து, பட்டு வேட்டி, புடவை கொடுத்து வணங்கி ஆசி பெறுவார். வேலூருக்குச் சென்று வந்த பிறகு தான், தன் ரசிகர்களை சந்திப்பார். சிவாஜி மறைந்த பிறகும், அதே பாரம்பரியத்தை, பிரபுவும், ராம்குமாரும் கடை பிடிக்கின்றனர். பெருமாள் இப்போது இல்லை; அவரது மனைவியை, பிரபுவும், ராம்குமாரும் பொங்கல் அன்று வேலூர் சென்று சந்தித்து, ஆசி பெறுகின்றனர். தன் நெருங்கிய நண்பர், நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியை மட்டும், உரிமையாக பெயர் சொல்லி அழைப்பார் சிவாஜி. அவரை வைத்து படம் எடுக்கும் மற்ற எல்லா தயாரிப்பாளர்களையும், வயது வித்தியாசமின்றி, "முதலாளி' என்றே அழைப்பார்.

திரைப்படத்துறைக்கு சிறந்த சேவை செய்ததற்காக, இந்திய அரசு அளிக்கும் உச்சகட்ட விருதான, "தாதா பால்கே சாகிப்' விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி தான். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, சிவாஜிக்கு அந்த விருதை அளித்த போது, அரங்கம் முழுவதுமே எழுந்து நின்று கரகோஷம் செய்தது. எனக்கு, ஏராளமான பரிசுகள் கொடுத்திருக்கிறார் சிவாஜி. ஆனால், அவர் கொடுக்காமல் நானே எடுத்துக்கொண்ட ஒரு பொருளை இன்றும் என் வீட்டு கண்ணாடி ஷோகேஷில் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அவர் இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளைநிற செருப்புகள்தான் அவை.

Saturday, September 26, 2009

மீண்டு(ம்).......



படங்கள், பதிவு எல்லாம் ரெடி பண்ணி வச்சாச்சு. திடீர்னு ஒரு வைரஸ் வந்து ஆபிஸ்ல பாதிபேர் சிஸ்டத்தை காலி பண்ணிடுச்சு. மூணு நாளா ஒரே போராட்டம். பல தடவை ஃபார்மட் பண்ணியும் சரிவரலை. இப்போதான் பரவாயில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணிணியில் எழுதி வச்சிருந்த பல கவிதைகள், அனுபவங்கள், கதைகளுக்கான குறிப்புகள், சேகரித்த படங்கள் எல்லாம் காலி. நல்லவேளை சில குறிப்புகள் டைரில எழுதி வச்சிருந்தாலும் இழந்தது ஏராளம்.


இப்போ எல்லாமே முதல்ல இருந்து தொடங்கணும். விடமாட்டம்ல......

சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடும்வரை மனிதன்.

அதுவும் நாம தாமிரபரணி தண்ணி குடிச்ச தன்மானத்தமிழன். விடுவோமா. எத்தனை முறை விழுந்தாலும் வீறு கொண்டு எழுவோம்ல. விரைவில் விட்டதை எல்லாம் பிடிப்போம் நல்லபடியாக நண்பர்கள் உங்கள் ஆதரவோடு.....

Friday, September 18, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப் பயணம்.....


ஒரு வரலாறே
வரலாறு பேசுகிறதே
ஆச்சர்ய குறி.

ஆம். நெடுநாளைய பயணத்திட்டம். இப்போதுதான் ஈடேறியுள்ளது.

நமது இந்தியநாட்டின் கலாசாரம், பண்பாட்டிற்கு ஈடான நதிக்கரை நாகரிகம் கொண்டது எகிப்து. இங்கு வந்தவுடனே பிரமிடுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற மியூசியம் , மம்மிகள் பார்த்தாயிற்று. தலைநகரம் கெய்ரோ, தங்கியிருக்கும் அலெக்சாண்டிரியா நகரம் எல்லாம் ஓரளவு சுற்றியாயிற்று. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆதார இடங்களான கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த அஸ்வான், லோக்சூர் போன்ற இடங்கள் பார்க்க வேண்டுமானால் குறைந்தது ஒரு வார காலம் தேவை. எதிர்பாராத விதமாக ரமலான் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. நீண்ட நாள் கனவு கைகூடும் நேரம்.

விமானம், கப்பல் மூலம் சென்றால் குறிப்பிட்ட இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும். சாலை வழி பயணம் என்றால் நாம் விருப்பப்பட்ட இடங்களை எல்லாம் பார்க்கமுடியும் என்பதால் திடீர் ஏற்பாடாக நண்பர்கள் அறுவர் இதோ கிளம்பிவிட்டோம். இறைவன் அருளால் நல்லபடியாக பயணம் முடித்து வந்து அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

ஏதோ மோகம் - பாகம் 3




நானும் அவர்களருகே சென்று ரமேஷ் அருகே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.”சார்,இது ராதா” என்றான் சேகர். ”அதான் காலையிலே சொன்னாங்கள்ல” என்ற என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். ”காலையில டீ பிரேக்ல நீங்க வெளியே வரலலை.அதான் உங்ககிட்ட அறிமுகப்படுத்த முடியலை.ராதா என்னோட தங்கச்சி.சித்தப்பா பொண்ணு” என்றதும் என் மனதில் ஏதோ இனம்புரியாத நிம்மதி.


”சார் பேரு ராஜா. எங்க ஃபேக்டரி இன்சார்ஜ். பாசுக்கு அடுத்தது இவர்தான். டிசைன், பிளானிங், புரொடக்சன், குவாலிட்டி, டெஸ்ட்டிங், டெஸ்பாட்ச் எல்லாம் பார்க்கிறார். இவருக்கு கீழேதான் நாங்க ஒரு பத்து இன்சினியர்ஸ் இருக்கோம்” என்று அவளிடம் என்னை சேகர் அறிமுகப்படுத்தினான்.”அப்போ ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு சொல்லுங்க” என்று அவள் கூறியதும் அனைவரும் சிரித்தோம்.சாப்பிட்டு முடிக்கும் வரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.


அவர்கள் முன்னமே வந்துவிட்டதால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டனர்.கைகழுவச் செல்லாமல் எனக்காக காத்திருந்தவர்களை நீங்கள் போய் கை கழுவுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.ஐஸ்கிரீம் எடுத்துகொண்டு அவளும்,சேகரும் என்னருகே வந்தார்கள்.”நான் என் கம்பெனி ஆள்களோடு சென்று கொஞ்சம் டிஸ்கஸ் செய்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.


என் எதிரே அமர்ந்த சேகரிடம் “ரமேஷ், எங்கே ?” என்றேன்.”சார், அவனால சாப்பிட்டவுடன் சிகரெட் அடிக்காம இருக்க முடியாது.அதான் வெளியே போய் ஒரு தம் போட்டு வர்றேன்னு போயிருக்கான்” என்றான்.


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மற்ற நிறுவனங்களை சேர்ந்த சிலருடன் பேசியவாறே ராதா அவள் கம்பெனி ஆள்களோடு சென்று அமர்ந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் கலகலப்பாக இருந்தது. அவ்வப்போது வெடிச்சிரிப்பும் கிளம்பியது. அதைக் கவனித்தவாறே சேகர் “பாவம் சார் அந்த பொண்ணு” என்றான்.”ஏன்ப்பா,நல்லா சந்தோஷமாத்தானே இருக்கு” என்ற என்னிடம் “இல்ல சார். வெளியேதான் அப்படி சந்தோஷமா இருக்கமாதிரி காமிச்சிக்கிறா” என்றவனை புரியாமல் பார்த்தேன்.

(தொடரும்)


Thursday, September 17, 2009

ஏதோ மோகம் - பாகம் 2




அனைவரது கவனத்தையும் ஒருங்கே திருப்பிய அந்தப் பெண்ணுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மாநிறம். நடுத்தர உயரம். நீண்ட கூந்தல். சிறந்த அழகி இல்லையென்றாலும் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்தவள் என்று கூறியவள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டு அவள் நிறுவன நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள். அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது. தடைப்பட்ட அறிமுகப்படலம் மீண்டும் தொடர்ந்தது. தொழில் நகரங்களான கோவை மற்றும் ஹோசூரிலிருந்தே பெரும்பாலான நிறுவனங்கள் வந்திருந்தன.


அவள் முறை வரும்போது பெயர் ராதா என்றும் பிளஸ் 2 படித்துமுடித்து விட்டு MS Office முடித்திருப்பதாக கூறினாள். அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்டாக அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் மேலும் கரெஸ்சில் BBA இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறினாள்.


நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோர்ஸ் மெட்டிரியல் விநியோகமும்,அந்தந்த நிறுவனத்தின் M.R (Management Representative) தேர்வும், அறிவிப்பும் நடந்தது. அதன் பின் தேநீர் இடைவேளை. அரங்கிற்கு வெளியே ஹாலில் தேநீர்,பிஸ்கட்டுகள் வைத்திருப்பதாக அறிவித்தனர். அனைவரும் தேநீர் அருந்த அரங்கை விட்டு வெளியே சென்றனர்.


எனக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாத காரணத்தினாலும்,எனது பாஸ் என்னை எங்கள் நிறுவனத்தின் MR ஆக அறிவித்துவிட்டபடியாலும் வெளியே செல்லாமல் இருக்கையிலே அமர்ந்து சில குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தேன்.எனது அசிஸ்டெண்டான ரமேஷ் ‘சார்,பிஸ்கட்டாவது சாப்பிடுங்க; என்றவாறு எடுத்து வந்தவற்றை கொடுத்தார்.அதை கொறித்தவாறே கோர்ஸ் மெட்டிரியலில் MRக்கான கடமைகள் என்னென்ன என பார்த்து கொண்டிருந்தேன்.


அரைமணி நேர டீ பிரேக் முடிந்து அனைவரும் அரங்கிற்குள் வந்தனர்.கோர்ஸ் மெட்டிரியலில் இருந்து விளக்கமும்,செய்முறை பயிற்சிகளும் ஆரம்பித்தனர். முக்கியமான பயிற்சி என்பதால் வந்திருந்த எல்லா நிறுவனங்களுமே சிறப்பான நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தமை எல்லோருடைய ஈடுபாடான செயல்களில் தெரிந்தது. அதற்குள் மதிய உணவு நேரமும் வந்துவிட்டது. ஒருமணி நேர உணவு இடைவேளைக்கு பின் அனைவரும் ஆஜராக வேண்டும் என அறிவித்தனர்.


எனது பாஸ் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து வருவதாக கூறிச்சென்றார்.நான் ஓய்வறைக்கு சென்று கை,முகம் கழுவி பின் உணவு அரங்கம் வந்தேன்.நூறு பேர் அமரக்கூடிய அளவு நல்ல பெரிய அரங்கம்.நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது.பஃபே சிஸ்டம் என்பதால் அனைவரும் வரிசையில் நின்று அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை தேர்வு செய்து எடுத்து கொண்டிருந்தனர்.


நானும் வரிசையில் நின்று எனக்கு பிடித்த உணவினை எடுத்து கொண்டு அமர இடம் தேடிய பொழுது ‘ராஜா சார்,ராஜா சார்’,உங்களுக்கு இங்கே இடம் பிடிச்சி வச்சுருக்கேன். வாங்க” என சேகர் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். இரண்டிரண்டு பேர் எதிரெதிராக மொத்தம் நான்கு பேர் அமரக்கூடிய மேஜையில் சேகரும்,அந்தப் பெண்ணும் அருகருகேயும் ,ரமேஷ் எதிரேயும் அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

(தொடரும்)


கதை சொல்லியின் கதை




இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.


தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.


Wednesday, September 16, 2009

ஏதோ மோகம்....




“சார், H.R மேனேஜர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க“ என்று அட்டெண்டர் வந்து அழைத்ததும் வெயிட்டிங் ஹாலில் இருந்த நான் குழம்பி போய்விட்டேன். நான் அந்த கம்பெனிக்கு சென்றிருந்ததோ டெக்னிக்கல் விஷயமான மீட்டிங். H.R டிபார்ட்மெண்ட்டுக்கும் நான் சென்ற வேலைக்கும் சம்பந்தமேயில்லை. நான் யோசிப்பதைப் பார்த்த அட்டெண்டர் “சார், உங்க பேர் ராஜா தானே“ என்று கேட்டவர், நான் ”ஆமாம்” என்றவுடன் “உங்களைத்தான் அழைத்து வரச்சொன்னார்கள் “ என்றார்.


சரி என்னதான் விஷயம் பார்த்துவிடுவோமே என்று முடிவுசெய்து அவருடன் சென்றேன். அவர் அறையினுள் சென்று அறிவித்து விட்டு வந்து “சார்,அம்மா உங்களை உள்ளே வரச்சொன்னார்கள்” என்றார். மேனேஜர் அம்மா என்றவுடன் நான் இன்னும் குழம்பியவாறு அறையினுள் சென்றேன்.


உள்ளே கண்ணாடி அணிந்த ஒரு பெண்மணி தொலைபேசியில் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறதே என யோசித்தவாறு நின்ற என்னை அமருமாறு சைகை காட்டி விட்டு பேச்சை தொடரலானார்.


மேஜையில் ராதா - MBA , HR Manager என்ற பெயர் பலகையைப் பார்த்து அதிர்ச்சியாகி மறுபடியும் அவர் முகத்தை பார்த்தேன்.  ஆம் அதே ராதா தான்
.

என் நினைவுகள் சுழல ஆரம்பித்தன.


சரியாக ஏழு ஆண்டுகள் முன் சென்னையில் நான் வேலை செய்த நிறுவனத்தில் ISO 9001 தரச்சான்றிதழ் வாங்க முயற்சித்து கொண்டிருந்தோம். கிண்டியில் உள்ள சிறுதொழில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் S.I.S.I நிறுவனம் சலுகை கட்டணத்தில் பல சிறிய நிறுவனங்களுக்கும் ஒரு கன்சல்டண்ட் மூலம் ISO 9001 சான்றிதழ் வாங்க பயிற்சி கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். எங்கள் நிறுவனத்தைப் போல தமிழ்நாடு முழுவதுமிருந்து நிறைய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.


ஒரு மாதம் சென்ற பின் பயிற்சி நாள் குறித்து விபரங்கள் அனுப்பியிருந்தார்கள். அந்த மாத இறுதியில் S.I.S.I நிறுவன வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் நான்கு நாள்கள் பயிற்சி என்றும் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் தலா நான்கு பேர் மட்டும் வர அனுமதி என்றும் குறித்திருந்தார்கள்.இப்படி தமிழ்நாடு முழுவதும் இருந்து இருபது நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்றும் குறிப்பு இருந்தது.எங்கள் பாஸ் (நிறுவன உரிமையாளர்), நான், சேகர், ரமேஷ் செல்வதாக ஏற்பாடு. குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. நான் அந்த சமயம் சைதாப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். எனவே பைக்கில் வந்துவிடுவதாக கூறிவிட்டேன். சென்னைக்காரரான சேகர் வீடு, பாஸ் வீட்டின் அருகே என்பதால் அவருடன் காரில் வருமாறு கூறினார். ரமேஷ் அம்பாள் நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியால் நேராக வந்துவிடுவதாக கூறிவிட்டார்.


பயிற்சியின் முதல்நாள் ஒன்பது மணிக்கு முன் எல்லோரும் கருத்தரங்கில் குழுமினோம்.பல்வேறு வயதில் சுமார் எண்பது பேர்கள். பயிற்சியாளர்கள் பத்துபேர் என அரங்கம் முழுதும் ஆண்கள், ஆண்கள், ஆண்கள். நிகழ்ச்சியின் முதல்கட்டமாக அனைவரும் அவரவர் நிறுவனங்கள் மற்றும் சுயதகவல்களை கூறிக்கொண்டிருந்தபொழுது ஒரு இளம்பெண் அவசர அவசரமாக வந்து “எக்ஸ்க்யூஸ்மீ’ என்றாள்.

(தொடரும்)


Tuesday, September 15, 2009

அண்ணா,அண்ணா,அண்ணா....




தலைவர்கள்
தொண்டர்களை
உருவாக்குகிறார்கள்.
சிறந்த தலைவர்கள்
சிறந்த தலைவர்களை
உருவாக்குகிறார்கள்.


என்ற அரசியல் மொழிக்கேற்ப சிறந்த தலைவராக வாழ்ந்தவர் திரு.அறிஞர் அண்ணா. சிறந்த எழுத்தாளரான அவரது கதைகள் பல நாடகங்களாக வெளிவந்து புதிய சரித்திரம் படைத்தன. பேச்சுவன்மை மிக்கவர். முதல்வராக இருந்தபோது 'சென்னை மாகாணம்' என்றிருந்ததை 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றி தமிழர் உள்ளமெலாம் உவகை அடையச் செய்தவர். தமிழகத்தில் இன்றளவும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட காரணமானவர். எண்ணற்ற புகழ் மாலைகள் பல ஏந்தியவர். அன்னாரது நூற்றாண்டு நிறைவு நாளான இன்று மட்டுமல்ல என்றென்றும் தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்திருப்பார்.


இன்று பொறியாளர் தினம்.



இன்று 42-வது பொறியாளர் தினம்.


இணையப் பொறியாளர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

Monday, September 14, 2009

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.

இரண்டு வயது முடிந்து மூன்றாவது தொடங்குகிறது.





அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sunday, September 13, 2009

ஆண் பார்வை


பெண்கள்
பெண்கள்
பெண்கள்
காணப்
படைத்தான்
கண்கள்.

கண்கள்
கண்கள்
கண்கள்
காணப்
படைத்தான்
பெண்கள்.


Saturday, September 12, 2009

“ அப்பா மாமா ”


எப்போதாவது வீட்டுக்கு
வரும் உறவினரையெல்லாம்
சுரேஷ் மாமா,ரமேஷ் மாமா
என்று சொல்லி பழ(க்)கியதால்
‘அப்பா’ம்மா,’அப்பா’ம்மா
என்று அடித்து அடித்து
அறிமுகப்படுத்தினாலும்
‘அப்பா மாமா’ ‘அப்பா மாமா’
என்றே அழைக்கிறது
விடுமுறையில் வந்திருக்கும்
வெளிநாட்டில்
வேலை செய்யும் தந்தையை
நினைவு தெரிந்தநாள் முதல்
சந்தித்திராத குழந்தை.

" முறுக்கு முனி " - முடிவு



சீக்கிரம் கீழே இறங்கிய முருகனுக்கு தாங்க முடியாத பசி எடுத்திருக்கிறது. சரி பக்கத்து தோட்டங்களில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று தேடிச் சென்றுள்ளான். அப்போது வயதான பெரியவர் ஒருவர் கண்ணில் பட்டாராம். “தம்பி யாரு,என்ன விபரம் “ என்று கேட்டிருக்கிறார். “தாத்தா காத்தாடில வேலை பார்க்கேன் . பசியா இருந்துச்சு. ஏதாவது திங்க கிடைக்குமான்னு தேடி வந்தேன். நீங்க யாரு“ என்று கேட்டிருக்கிறான்.


“நான் பக்கத்து ஊரு. ஊர் மாடுவளை மேய்க்கேன். அஞ்சாறு மாடுவளை காணோம். அதான் அதுவளை தேடி வந்தேன் “ என்றவர்  “பக்கத்துல தோட்டம் ஏதுமில்லையே. என்ட்ட முறுக்கு இருக்கு. சாப்பிடுதியளா “ என்று கேட்டிருக்கிறார்.  நல்ல பசி என்பதால் அவரிடம் கதை பேசிக்கொண்டே அவர் முறுக்கு கொடுக்க கொடுக்க இவனும் வாங்கி வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்திருக்கிறான்.


அந்த நேரம் செக்யூரிட்டி,” முருகா, முருகா “ என்று சத்தம் கொடுத்தவாறு தேடி வர எழுந்து  “இந்தா இங்க இருக்கேன் “ என்று குரல் கொடுத்திருக்கிறான். “இங்க என்னடே பண்ற, உன்னைய அங்க எல்லாரும் தேடிட்டு இருக்காங்க “ என்று சத்தம் போட்டவர் அவன் கையில் முறுக்கைப் பார்த்து “இது ஏதுடே “ என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் பெரியவர் ஞாபகம் வந்து “ஒரு தாத்தா தந்தாரு. தாத்தா,தாத்தா “ என்று அக்கம் பக்கம் தேடியிருக்கிறான். யாருமே இல்லையாம். “சரியா போச்சு.முறுக்கு முனியப் பார்த்திருக்கே “ என்று கூறி அவனை கூட்டி வந்திருக்கிறார்.


பக்கத்து ஊரில் முனியாண்டி என்ற ஆதரவற்ற வயதானவர் இருந்தாராம். வேறு எந்த வேலைக்கும் செல்லமுடியாது என்பதால் ஊராரின் ஆடு, மாடுகள் மேய்த்து கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.முறுக்கு என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். சாப்பாடு கூட தேவையில்லையாம். எப்போதும் பத்து, இருபது முறுக்கு கைவசம் வைத்திருப்பாராம்.


ஒரு நாள் அப்படி காட்டில் மேய்த்து கொண்டிருந்த பொழுது ‘மாடு களவாணிகள்’ அவருக்கு தெரியாமல் சில மாடுகளை ஓட்டி சென்று விட்டனராம். காணாமல் போன மாட்டு சொந்தகாரர்களால் பிரச்சினை போலிஸ் ஸ்டேசன் சென்று இவரையும் ஒருவாரம் உள்ளே வைத்துவிட்டார்களாம். வெளியே வந்தவர் அவமானம் தாங்காமல் காட்டுக்குள் சென்று பூச்சிமருந்து குடித்து இறந்து விட்டாராம்.அன்று முதல் நெடுங்காலமாக மாடுகளை மேய்த்த காட்டுக்குள் அவர் ஆவியாக  அலைவதாக செக்யூரிட்டி கூறி முடித்தார்.


இந்த கதைகளை முருகனை அழைத்து வரும்போதே கூறி விட்டிருந்த படியால் அவன் திகிலடித்து போயிருந்திருக்கிறான். ”ஏண்டே உனக்கு முறுக்கு வாங்கி திங்க வேற ஆளே கிடைக்கலையா“ என்று வீடு வரும்வரை எல்லோரும் அவனை கிண்டலடித்து கொண்டே வந்தனர்.

மறுநாளிலிருந்து முருகன் வேலைக்கு வரவில்லை.

Friday, September 11, 2009

“ முறுக்கு முனி ”




“சார் என்ன சார் தெனமும் இப்படி லேட்டாகுது” என்று கேட்ட முருகனிடம். “உனக்கு என்னடே நீதான் இருட்டு முன்னாடி எறங்கிடுதியே. பாப்பம்டே இன்னிக்காவது சீக்கிரம் முடியுதான்னு “என்று பதில் கூறினாலும் 'என்னடா வேலை இது' என்று அலுப்பாகவே இருந்தது.

காற்றாலை நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்காக தினமும் மெஷின் மீது 250 அடி ஏறி இறங்குவது என்பது மிக கடினமான வேலை. கம்பெனி ஆள்களோடு காண்ட்ராக்ட் ஆள்களும் பாதிக்கு பாதி இருப்பார்கள். கடினப்பணி காரணமாக காண்ட்ராக்ட்டில் வேலைக்கு வருபவர்கள் தாக்குபிடிக்க முடியாமல் சில நாட்களில் வேலையை விட்டு சென்றுவிடுவார்கள். எனவே அடிக்கடி புதிய ஆட்கள் வந்து போய் இருப்பர். அப்படி எங்கள் அணீயில் புதிதாக வந்தவன்தான் முருகன். வேலை செய்கிறானோ இல்லையோ ‘சளசள’வென்று வாயாடுவதில் சூரன்.

அன்றும் அப்படித்தான் வேலை முடிந்து இறங்க நேரமாகிவிட்டது. நன்றாக இருட்டியும் விட்டது. இறங்கும் நேரம் “முருகனை எங்கப்பா” என்றதற்கு, ”சார் அவன் அப்பலே எறங்கிட்டான்” என்று பதில் வந்தது. கீழே வந்து மெசின் செக்யூரிட்டியிடம் கேட்டதற்கு “சார், இப்படி காட்டுக்குள்ள போனான். இருங்க போய் பார்த்துட்டு வர்றேன்” என்று கூறி விட்டு அவனை தேடிப் பார்க்கச் சென்றார்.

எல்லோரும் கீழே இறங்கி உடையெல்லாம் மாற்றி வண்டியில் ஏறும்வரை முருகனும், செக்யூரிட்டியும் வரவில்லை. அனைவரும் பொறுமையிழந்த நேரம் முருகனை அழைத்துக் கொண்டு செக்யூரிட்டி வந்தார். கலகலப்பான முருகனின் முகம் பேயறைந்தாற்போல் வெளிறிப்போய் இருந்தது.

"சார் ‘முறுக்கு முனி’ட்ட மாட்டிகிட்டான். கோயில்ல கொண்டு போய் தண்ணி கோரி எறிஞ்சா சரியா போயிடும்" என்று செக்யூரிட்டி கூறியதை கேட்ட எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

(தொடரும்)

ஐ.நா.வே உன் அடையாளம் என்ன... ??!!


ஐ.நா., அதிகாரியை வெளியேற்ற இலங்கை பிடிவாதம்.

கொழும்பு: "ஐ.நா., அதிகாரி கொழும்பிலிருந்து, வரும் 21ம் தேதிக்குள் வெளியேறியே ஆக வேண்டும்' என்று, இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஐ.நா., குழந்தைகள் நிதியகத்தின் (யுனிசெப்) இலங்கை பிரிவுக்கான உயரதிகாரி ஜேம்ஸ் எல்டர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இவர் அறிக்கை வெளியிட்டு செயல்பட்டு வருவதாக, இலங்கை அரசு குற்றம்சாட்டியது.

அவரது விசாவை, நேற்று முன்தினம் இலங்கை அரசு ரத்து செய்தது. அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வரும் 21ம் தேதி வரை, இலங்கையில் தங்க அனுமதி அளித்துள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவை, யுனிசெப் அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.இதுகுறித்து "யுனிசெப்' இயக்குனர் மற்றும் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி கூறியதாவது:ஜேம்ஸ் எல்டரின் வெளியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில், யுனிசெப் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஐ.நா.,வின் உயர்மட்டம் வரைக்கும் இவ்விவகாரத்தை கொண்டு செல்வதாக இருந்தும், அவருக்கு சட்டரீதியான கடிதத்தை வழங்கி, வெளியேற்றுவதிலேயே இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------

சுமார் 2 கோடி மக்கள்தொகை கொண்ட குட்டி நாடு , இனவாதம் என்ற பெயரில் என்னவெல்லாம் சேட்டை செய்கிறது.

இது யார் கொடுத்த தைரியம் ?.

ஐநா என்ற அமைப்பு எதற்கு ??.

வலியோன் எளியோனை அடிப்பதை வேடிக்கை பார்க்கவா ???.

தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் ஐநாவின் நடுநிலைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் குறித்து மேலும் மேலும் யோசிக்க வைக்கின்றன.


Thursday, September 10, 2009

டில்லி அரசு பள்ளியில் மின்கசிவு. தப்பிக்க ஓடிய மாணவிகள் 5 பேர் நெரிசலில் சிக்கி பலி


புதுடில்லி : டில்லியில் அரசு பள்ளியில் மின்சாரம் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர். மாணவ, மாணவிகள் 30 பேர் படுகாயமுற்றனர். மாணவர்கள் இறந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசாருக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மின்சாரக்கசிவு ஏற்பட்டதாக தகவல் : டில்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் மேக மூட்டங்களுடன் காணப்பட்டு வருகிறது. கசூரிகாஸ் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் அவரவர் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். சில வகுப்புகளில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர் . இந்நி‌லையில் பள்ளியை சூழ்ந்து இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதாகவும், இது பள்ளி கட்டடத்தில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் செய்தி பரவியது.

30 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம் : இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை ‌விட்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. அச்சமுற்ற மாணவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கூட்டம், கூட்டமாக ‌வெளியேறினர். இப்போது ஏற்பட்ட நெரிசிலில் பலர் சிக்கி கீழே விழுந்தனர். இதில் பல மாணவர்களின் கால் மிதியில் சிக்கி மயக்கமுற்றனர். நெரிசலில் 5 மாணவர்கள் பிணங்களாயினர். படுகாயமுற்ற 30 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் மீது கல்வீச்சு : பள்ளியில் மாணவிகள் இறந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அவசர, அவசரமாக பள்ளி முன் வந்து குவிந்தனர். தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு புறப்பட்டனர். கூடி நின்ற பெற்றோர்கள் எதிர்ப்பு கோஷங்கள‌ை எழுப்பினர். இதனையடுத்து போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனால் போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குழந்தைகள‌ை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் முன்பு கதறி அழுதபடி நிற்கின்றனர்.

முதல்வர் ஷீலா தீட்ஷித் விரைந்தார் : சம்பவம் நடந்த பள்ளி மற்றும் காயமடைந்த மாணவர்களை பார்த்து விசாரிக்க முதல்வர் ஷீலா தீட்ஷத் விரைந்தார். விபத்தில் சிக்கி காயமுற்றவர்கள‌ை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார். சம்வம் குறித்து உயர் மட்ட குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் போட்டி


கடல்
ரயில்
யானை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்காது
என்றான்
ஒரு
பெருங்கவிஞன்.

நல்லவேளை.
அவன் உன்னைப்
பார்க்கவில்லை.

பார்த்திருந்தால்
அந்த பட்டியலில்
உன் பெயரையும்
சேர்த்து
உன்னுடனான
காதல் போட்டியில்
என்னோடு மல்லுக்கட்ட
இன்னும் பலபேரை
இழுத்து விட்டிருப்பான்.

Wednesday, September 09, 2009

இழந்தவை ஏராளம்....


சம்பாதித்தவையை விட
இழந்தவையே ஏராளம்.
அப்பா அம்மா அன்பு
சகோதர பாசம்
நண்பர்கள் விருந்து
உறவினர் வீட்டு விசேஷங்கள்
மனைவியின் அருகாமை
குழந்தையின் மழலைமொழி
இன்னும் பலவாக
எல்லோர்க்கும் பொதுவாக
சம்பாதித்தவையை விட
இழ்ந்தவையே ஏராளம்.

பத்திரிக்கை தர்மம் என்றால்....


நமீதா படம் எப்போ ரிலீசு ? நயன் தாரா இப்போ யார் கூட இதுதான் நம்ம தமிழ்நாட்டுப்பத்திரிக்கைங்க கவலை. இன அழிப்பு உச்சத்தில் இருந்தப்போ கூட அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவல்ன்னு ஈனச்செய்திகள் போட்டு அரிப்பை தீர்த்துகிட்டவங்க நம்மாளுங்க.

வட இந்திய பத்திரிக்கைகளூம், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுகிட்டு இனவாத அரசின் வெற்றியை எப்படி இடைவிடாம கொண்டாடுனாங்கன்னும் நமக்கு தெரியும்.

அநியாயத்தை தட்டி கேட்க,சுட்டி காட்ட தமிழனா,இந்தியனா இருக்கனும்கிற அவசியம் இல்லை.நல்ல மனுசனா இருந்தாப் போதும்.

ஏற்கனவே ஈழத்தமிழனை கண்ணைக் கட்டி சுட்டு கொல்றதை சானல் 4 ஒளிபரப்பி ஏற்படுத்தின பரபரப்பு இன்னும் அடங்கலை.இது குறித்த CNNன் செய்தி அறிக்கையை http://www.paristamil.com/tamilnews/?p=29996 என்ற சுட்டிக்கு சென்று பாருங்கள்.

இப்போ வன்னியில அகதி முகாம்கிற பேர்ல என்னென்ன அட்டூழியங்கள் நடக்குங்கறதை அல்ஜசீரா தொலைக்காட்சி தீவிரமா விசாரணை செய்து ஒரு செய்தி தொகுப்பா வெளியிட்டிருக்கு. செய்தி தொகுப்பின் சுட்டி http://www.paristamil.com/tamilnews/?p=32093. அதில் உள்ள Video என்பதை க்ளிக் செய்து அல்ஜசீராவின் வீடியோ செய்தி தொகுப்பை பார்க்கவும்.

இப்படியெல்லாம் செய்தி வெளியிடுறதுல இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்ன லாபம் ?. உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறைன்னு விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறாங்களா ? அநியாயத்தை உலக மக்களுக்கு தெரியப்படுத்தணும், நியாயத்துக்காக போராடணும்கிற பத்திரிக்கை தர்மம்தான் காரணம்.

முடிந்தால் இச்செய்திகளை நாலு நல்ல மனுசங்க அறிய தெரியப்படுத்துவோம்.

நம்ம தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் வழக்கம் போல சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தரட்டும். மேலும் மேலும் வருமானத்தை பெருக்கட்டும்.

Tuesday, September 08, 2009

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது


புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது. இதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். மாநில அரசுகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இனி 10ம் வகுப்பு தேர்வு கிடையாது. 2010-11ம் கல்வியாண்டில் இருந்து இது அமலுக்கு வருகிறது. அவர்கள் விரும்பினால், 10ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக எழுதலாம்.இந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டும், 2010 மார்ச்சில் பொதுத்தேர்வை எழுத வேண்டும். அப்படி எழுதும் தேர்வுக்கான முடிவுகள், கிரேடிங் முறையில் அறிவிக்கப்படும்.

வரும் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து கிரேடிங் முறை அமலில் இருக்கும். 

ஆனாலும், 10ம் வகுப்பு தேர்வை பொதுத் தேர்வாக எழுதுவது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது.பத்தாம் வகுப்பு தேர்வை தேர்வு வாரியம் நடத்துவது 2011ம் ஆண்டில், ஒழிக்கப்பட்டு விடும். அதன்பின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்படுவர் அல்லது பல்கலைக்கு முந்தைய நிறுவனங்களில் சேர்ந்து தேர்வு எழுதுவர். ஒரே பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்களும், விரும்பினால் 10ம் வகுப்பு தேர்வை, பொதுத் தேர்வாக எழுதலாம். அதே சமயம், சி.பி.எஸ்.இ., திட்டப்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் தேர்வு நிச்சயம் உண்டு.

9 அம்ச கிரேடிங்: கிரேடிங் முறை விரிவான மதிப்பீடு கொண்டதாக இருக்கும். அது மாணவர்களுக்கு மிகவும் நல்லது. இருப்பினும், கிரேடுடன் தங்களின் மதிப்பெண் சதவீதத்தையும் மாணவர்கள் கேட்டுப் பெறலாம்.இந்த கிரேடிங் முறை ஏ1 ( 91 முதல் 100 மதிப்பெண்கள் வரை, அசாதாரணமானது), ஏ2 (81 முதல் 90 மதிப்பெண்கள் வரை, மிகச் சிறந்தது), பி1 (71 முதல் 80 வரை, மிகநன்று), பி2 (61 முதல் 70 வரை, நன்று), சி1 (51 முதல் 60 வரை, மிதமானது), சி2 (41 முதல் 50 வரை, சராசரி), டி (33 முதல் 40 வரை, சராசரிக்கும் குறைவு), இ1 (21 முதல் 32 வரை, கவனம் தேவை) மற்றும் இ2 (00 முதல் 20 வரை, திருப்தியில்லை ) வரை ஒன்பது அம்ச அளவுகோல்களை கொண்டதாக இருக்கும்.

கிரேடிங் விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி தலைமையிலான உயர்மட்டக் குழு இறுதி செய்துள்ளது. இந்த முறையில் மாணவர்கள் சான்றிதழ் பெற வேண்டும் எனில், 33 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்த முறை சிறப்பானது, மாணவர்களின் திறனை நல்ல முறையில் நிர்ணயிக்கும். மாணவர்களின் மேம்பாட்டை உறுதி செய்ய, பள்ளிகள் மட்டத்தில் அவர்களை மதிப்பீடு செய்யும் முறை சி.சி.எஸ்., என , அழைக்கப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு முறை தொடர்ந்து நீடிக்கும். இந்த மதிப்பீட்டு முறை மாணவர்களை பாட ரீதியாக மட்டுமின்றி, இதர பல நடவடிக்கைகளிலும் அவர்களின் திறனை மதிப்பீடு செய்வதாக இருக்கும்.இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது போல, மாநில கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆசை, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு பக்திப் பதிவு......(நெல்லை மக்களுக்குக்காக)


புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு நவ திருப்பதிகளுக்கு 'ஸ்பெஷல்' பஸ்கள்.

திருநெல்வேலி: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவ திருப்பதிகளுக்கு "ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்படுகிறது. நவ திருப்பதி கோயில்களை பக்தர்கள் வசதியாக வழிபடும் நோக்கத்தில் புரட்டாசி சனிக் கிழமை நாட்களான வரும் 19ம் தேதி, 26ம் தேதி, அக்டோபர் மாதம் 3ம் தேதி, 10ம் தேதி, 17ம் தேதி ஆகிய தேதிகளில் நாட்களில் சுற்றுலா பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுற்றுலா பஸ்கள் பாளை புதிய பஸ்ஸ்டான்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நவ திருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி வழியாக கருங்குளம், நான்குநேரி மற்றும் திருக்குறுங்குடி சென்று இரவில் பாளை புதிய பஸ்ஸ்டான்டிற்கு வந்தடையும். இதற்கான பஸ் கட்டணம் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் ஆகும். இதற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் பாளை புதிய பஸ்ஸ்டான்டில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் தேவைக்கேற்ப "ஸ்பெஷல்' பஸ் வசதி செய்யப்பட உள்ளது. நெல்லை ஜங்ஷன் - திருவேங்கடநாதபுரம், நெல்லை ஜங்ஷன் - கருங்குளம், நெல்லை ஜங்ஷன் - எட்டெழுத்து பெருமாள் கோயில், நெல்லை ஜங்ஷன் - நம்பி கோயில் (வழி - நான்குநேரி, ஏர்வாடி திருக்குறுங்குடி), திருக்குறுங்குடி - நம்பி கோயில், அம்பை - அத்தாழநல்லூர், வீரவநல்லூர் - அத்தாழநல்லூர் வழித்தடங்களில் "ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பக்தர்களும்,பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Monday, September 07, 2009

தொடர்பதிவு...

ஒரே கதையும் கவிதையுமா எழுதிட்டு இருந்த நேரத்துல அன்புதம்பி இரும்புத்திரை அரவிந்த் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருந்தார்.

அந்தத் தொடர்பதிவு 26 ஆங்கில எழுத்துக்களுக்கும் ஒரு பதில் தருவது.

சுவாரசியம்தானே!! இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

இப்போ நாம ஆரம்பிப்போமா!!...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ராஜா சபை / (துபாய்) ராஜா

2. B – Best friend? : மனதறிந்து நடப்பவன்/ள்.

3. C – Cake or Pie? : இரண்டுமே பிடிக்காது.

4. D – Drink of choice? : இளநீர்,பதநீர் (பார்லி நீர்) போன்ற இயற்கை பானங்கள்.....

5. E – Essential item you use every day? : காது (தினமும் காலையில அலாரம் சத்தம் கேட்டுத்தானே எழும்புறோம்)

6. F – Favorite color? - மிட்டாய் ரோஸ் கலர் ?! (திருமணத்திற்கு முகூர்த்தப்பட்டு ரோஸ் கலரில் எடுங்கள் என்று கூறிய என்னை என் மனைவி உட்பட எல்லோரும் முறைக்க ... அடுத்த மாதம் அதே நிற பட்டை ஜோதிகா-சூர்யா திருமணத்தில் முகூர்த்தப்பட்டாக கண்டு எல்லோரும் வியந்தனர்)

7. G – Gummy Bears Or Worms: என்ன கொடுமை சார் இது.

8. H – Hometown? - திருநெல்வேலி.

9. I – Indulgence? – எதிரிலிருப்பவரைப் பொறுத்தது..

10. J – January or February? - பிப்ரவரி மாதம் - பிறந்த மாதம் (காதல் மாதம்)

11. K – Kids & their names? - ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு பெயரும் எதுகை மோனைதான். ராஜா மகள் பூஜா.

12. L – Life is incomplete without? - Friendship (நல்லதோ,கெட்டதோ நாலு பேரு வேணும்ல..)

13. M – Marriage date? – மறக்ககூடிய சம்பவமா... . (http://rajasabai.blogspot.com/2006_07_01_archive.html)

14. N – Number of Siblings?( உடன்பிறப்புகள்) -அக்கா ஒண்ணு அண்ணன் ஒண்ணு. (இணையம் மூலம் ஏராளம்)

15. O – Oranges or Apples? – எதுனாலும் ஜூஸா..

16. P – Phobias/Fears? - பெண்கள்.(அம்மா முதல் கொண்டு) ஆழமின்னா ஆழமில்ல சேறும் கடலும் ஆழமில்ல.ஆழம் எது அய்யா.... அந்த பொம்பள மனசு தான்யா.....

17. Q – Quote for today? – அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்......

18. R – Reason to smile? – உணர்ச்சிகளின் வெளிப்பாடு. (வெற்றியானாலும்,விரக்தியானாலும்)

19. S – Season? - குற்றால சீசன் தான். (திருநெல்வேலிகாரன்ட்ட கேக்குற கேள்வியால இது..)

20. T – Tag 4 People?- (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)

1.பல்சுவை பதிவர் – தங்கராசு நாகேந்திரன்.

2.நையாண்டி மன்னன் - நையாண்டி நைனா.

3.நகைச்சுவை ராணி - (சந்திரமுகி) கலகல ப்ரியா .

4.நண்பர் - கடையம் ஆனந்த்.


21. U – Unknown fact about me? – எங்கே செல்லும் இந்தப்பாதை...

22. V – Vegetable you don't like? - முள்ளங்கி

23. W – Worst habit? - ஓய்வில்லாமல் உழைப்பது (பொழுதுபோக்கிற்காக இணையத்தில்... :))... )

24. X – X-rays you've had? - எண்ணிக்கை இல்லை.(கைகால் முறிவுகளுக்கும்,விசா மருத்துவ சோதனைகளுக்கும் பல முறை)

25. Y – Your favorite food? – சுடச்சுட கூட்டாஞ்சோறு.

26. Z – Zodiac sign? - கும்ப ராசி,சதய நட்சத்திரம்..

தொடருங்கள் நண்பர்களே.....

பிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900 பேர் தப்பினர் : 60 பேர் மூழ்கினர்


மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே சூப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது . இதில் பயணித்த 968 பேரில் தொள்ளாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் மாயமாயினர். 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.



சாண்டோஸ் பகுதியில் இருந்து இலாய்லோ நோக்கி சூப்பர் பெர்ரி கப்பல் புறப்பட்டது. பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் உள்பட ஆயிரம் பேர் இந்தக்கப்பலில் பயணித்தனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே ஷாம்போங்கா அருகே (மணிலாவில் இருந்து 860 கி. மீட்டர் தொலைவில் ) கப்பல் திடீரென மூழ்க துவங்கியது.



தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறிய பரிதாபம்: கப்பல் மூழ்கிய நேரம் அதிகாலை என்பதால் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததார்கள். பயணிகள் அனைவரும் அலறி அடித்து எழும்பினர். பின்னர் அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்து உயிரை காப்பாற்ற முயற்சித்தனர். கப்பல் மூழ்கும் செய்தி கப்பல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கப்பல் படையினர், விமான படையினர், வர்த்தக கப்பல் , மற்றும் மீனவர்கள் படகு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். 900 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இறந்த 10 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஏனையயோர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Sunday, September 06, 2009

காதல் (அப்)பாவி

உடல்
பொருள்
ஆவி.

ஒருங்கே
எடுத்தாள்
பாவி.
------------------------------------
புரண்டு
புரண்டு
படுத்தேன்.
தூக்கம்
வரவில்லை.

பெண்ணே
உன்னை
நினைத்தேன்.
படுக்கவும்
முடியவில்லை.

--------------------------------------------

இதயம்
துடிக்கும்
எந்திரம்.


எப்போதும்
சொல்லும்
உன் பெயரெனும்
மந்திரம்.

Saturday, September 05, 2009

ஆயிரம் எம்.ஜி.ஆர். வந்தாலும் திருத்த முடியாது


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ...
புரட்சிதலைவர் பாடிய பாட்டு.

அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தனிமனிதனுக்கும் அறிவுரையாக அந்த பாட்டில் "வயக்காட்டில் பாடுபடு" என்றும் கூறியிருப்பார். வெளிநாட்டில் சென்று கஷ்டப்படுவதற்கு உலகத்தில் உன்னத தொழிலான உழவுத்தொழிலை செய்வது மிக நன்று.


இன்றைய நாளிதழில் வெளிநாட்டு வேலையை நம்பி ஏமாந்தவர்கள் பற்றிய இன்னொரு செய்தி.

-------------------------------------------------

சென்னை : அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியாவிற்கு சென்ற 30 இளைஞர்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு பின், சென்னை திரும்பினர்.போலி ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்களும், அப்பாவிகளும், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல், ஏமாந்து திரும்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களில், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இந்த வகையில், மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழர்கள் இருவர் உட்பட 30 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு: கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.என்.நாயர் எனும் டிராவல்ஸ் ஏஜென்ட், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், "மலேசியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில், பிட்டர், வெல்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும். தங்குமிடம், சாப்பாடு இலவசம். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மும்பையில் நேர்முகத்தேர்வு நடந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜமதன் (26), பிரபு (25) உட்பட ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, ஜோர்பூர் என்ற இடத்தில், சிறிய அறையில் 80 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் கொடுத்து, சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த தானியங்கள், 10 நாட்களில் தீர்ந்துவிட்டன.

ஏஜென்ட் கூறியதுபோல வேலையும் கொடுக்காமல், 10 நாட்களுக்கு மேல் சாப்பாடு எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது, அடித்து துன்புறுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், ஒரு வேளை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் நிலை குறித்தும், நாடு திரும்ப உதவும் படியும் கோரி, மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு இ-மெயில் அனுப்பினர். மத்திய அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட 80 இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவர்களில், கடந்த வாரம் 17 பேர் இந்தியா திரும்பினர். காலை 8.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும், 9.50 மணிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் இரண்டு தமிழர்கள் உட்பட 30 பேர் சென்னை வந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஏஜென்டின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டோம். மலேசியா செல்ல நகைகள், வீடுகளை விற்று, ஒவ்வொருவரும் தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மலேசியா வாழ் தமிழர் கமலநாதன் என்பவர் மூலம், மத்திய அமைச்சர் வயலார் ரவியை தொடர்பு கொண்டு, இந்திய தூதரகத்தின் உதவியால் நாடு திரும்பியுள்ளோம்' என்றனர்.

வித்தியாசமான ஒரு வரவேற்பு! வெளிநாடுகளில் வேலைக்கு சென்று ஏமாந்து, சித்திரவதை அனுபவித்து நாடு திரும்புபவர்களை விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், சென்னை திரும்பிய 30 இளைஞர்களை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் டெய்லர் வேலைக்கு சென்று, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து, ஊர் திரும்பிய நபர் ஒருவர் வரவேற்றார். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அந்நபரின் பெயர் சேரன். அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வரும் இவர், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், ஏமாந்து தான் போக வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கழுத்தில் "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்ற வாசகத்துடன், மொபைல் போன் எண்கள் எழுதிய போர்டை மாட்டிக் கொண்டு விமானம் நிலையம் முழுவதும் வலம் வந்தார்.
----------------------------------------------------

இந்தியாவிலே எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும் பொழுது நமது இளைஞர்கள் மக்கள் பணம் கட்டியாவது வெளிநாடு செல்ல விரும்புவது ஏன் ?.போலி ஏஜெண்ட்களிடம் கொடுக்கும் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்யலாமே.படித்த மக்களே பலவாறு ஏமாற்றப்படும் பொழுது படிக்காத பாமர மக்களெல்லாம் எம்மாத்திரம்.

வெற்றிக்கொடி கட்டு,புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,பாண்டி போன்ற படங்களை பார்த்தாவது திருந்த வேண்டாமா ?

தொழிலாளர்களின் உழைப்பால் வளம்பெரும் நாடுகள் அவர்களை ஊருக்குள் தங்க அனுமதிக்காமல் பாலைவன முகாம்களிலே தங்க வைக்கின்றன.

எனதினிய தமிழ்மக்களே நல்ல சம்பளம்.விடுமுறை தரும் நிறுவனங்கள் என நண்பர்கள்,உறவினர்கள் உறுதி கூறி அழைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்.இல்லையேல் நமது நாட்டிலேயே தகுதிக்கேற்ப கிடைக்கும் வேலையில் குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.


Friday, September 04, 2009

தமிழா...தமிழா.....


திரைகடலோடி
திரவியம் தேடு
என்றான்
பழந்தமிழன்.


இன்றைய உலகில்
இணையகடலெங்கும்
இளமை தேடுகிறான்
இளந்தமிழன்.


நரைகிழடாகி
வலைகடலெங்கும்
வாலிபம் தேடுகிறான்
வயதான தமிழன்.

பன்றிக்காய்ச்சல் பரவியது எப்படி - சில படங்கள்

பன்றிக்காய்ச்சல் பரவியது எப்படி என இணையம் மூலம் வந்த சில படங்கள்.
வினையான விளையாட்டுக்கள்.









Thursday, September 03, 2009

ஆந்திர முதல்வருக்கு அஞ்சலி




நேற்று காலை காணாமல் போன விமானம் கர்னூல் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு ஆந்திர முதலவர் திரு.ராஜசேகர ரெட்டியும் உடன் சென்றவ்ர்களும் அகால மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் அரசியல் தெய்வமான என்.டி.ஆரையே ஒழித்துக்கட்டியவர் சந்திரபாபு நாயுடு. ஹைதராபாத்தை ஹைடெக் சிட்டியாக மற்றினார். பில்கேட்ஸை அழைத்து வந்து பல ஐ.டி.கம்பெனிகள் வரவைத்தார். நக்சலைட்டுகள் குண்டுவெடிப்பில் சிக்கி தப்பித்ததை அனுதாப ஓட்டுக்களாக வாங்கிவிடலாம் என அவசர அவசரமாக பதவிகாலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தினார்.ஆனால் அவரது அனைத்து கனவுகளுக்கும் முடிவு கட்டியவர் திரு.ராஜசேகரரெட்டி.

சந்திரபாபு நாயுடு மறந்த மக்கள் நலத்திட்டங்களும் முக்கியமாக விவசாயிகள் பயன்பெற பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தவர் திரு.ராஜசேகரரெட்டி.

சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் அரசியலில் குதித்த சிரஞ்சீவியின் ஆசையையும் தவிடுபொடியாக்கி மீண்டும் மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி வர காரணமானவ்ர் திரு.ராஜசேகரரெட்டி.

ஆந்திர மாநிலத்தில் எல்லோரிடமும் அன்பும், அரவணைப்புமாக மிகவும்கட்டுக்கோப்பாக கட்சியை நடத்தியவர் திரு.ராஜசேகரரெட்டி.

அகால மரணமடைந்த அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.